Sunday 13 April 2014

"அன்பினால் அன்பில் செய்வோம்,
எல்லைமீறும் எவரிடமும் நம்
இனப்பண்பைக்காட்வோம்"

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் களம் காணும் நம்மவர்கள்:-

தாமரை சின்னத்தின் சார்பாக...

இராமநாதபுரம் - குப்பு ராமு
தஞ்சாவூர் - கருப்பு முருகானந்தம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (தலைவர், புதியநீதிக்கட்சி)

உதயசூரியன் சின்னத்தின் சார்பாக...

சென்னை - டி.கே.எஸ்.இளங்கோவன்
தஞ்சாவூர் - டி.ஆர்.பாலு
தேனி - பொன்.முத்துராமலிங்கம்

அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் ஓர் அகமுடையாரை கூட வேட்பாளராக நிறுத்தவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். முக்குலத்தோருக்கென்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மறவருக்கு ஒரு தொகுதியும், மீதமுள்ள அனைத்து தொகுதிகளையும் கள்ளருக்கு மட்டுமே சசிகலா முன்னுரிமை கொடுத்துள்ளார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இது தமிழக நிலைமை.

மேலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைவதே நம் நாட்டிற்கு நன்மை பயக்கும் என்பதையும், மோடி பிரதமர் ஆவதுதான் பாரதத்திற்கு சிறப்பான ஆட்சியாக அமையும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இது இந்திய நிலைமை.

இதை தவிர NOTA என்ற பொத்தான் மூலமாக யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதையும் இத்தேர்தலின் மூலமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை! எனவே, அனைவரும் வாக்களிக்க மறவாதீர்!

Saturday 15 March 2014

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர்

 
 



அருள்மிகு வேற்கண்ணிநாயகி உடனுறை தடுத்தாட்கொண்டநாதர்

மரம்: மூங்கில்
குளம்: பெண்ணையாறு

பதிகம்: பித்தாபிறை -7 -1 சுந்தரர்

முகவரி: திருவெண்ணெய்நல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், 607203
தொபே. 04153 234548

இவ்வூரிலுள்ள கோயிலுக்குத் திருவருட்டுறை என்று பெயர். விழுப்புரத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் இருப்புப்பாதையில் திருவெண்ணெய்நல்லூர் தொடர் வண்டி நிலையத்துக்கு ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது.

சுந்தரமூர்த்தி நாயனார், புத்தூர் சடங்கவியாருடைய மகளாரைத் திருமணஞ் செய்தருளும் போது, இறைவர், முன் கயிலாயத்தில் அருளியபடி வயது முதிர்ந்த அந்தணராய்த் தோன்றித் தடுத்தாட்கொண்டருளிய இடம். அப்புத்தூர் இது பொழுது மணம் தவிர்ந்தபுத்தூர் என்று வழங்கப்படுகின்றது. சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் எழுந்தருளியிருந்த தலமும் இது. இம் மெய்கண்ட தேவருக்கு அருள் செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார் ஆவர். இறைவர்: தடுத்தாட்கொண்டநாதர், இறைவி: வேற்கண்ணிநாயகி. மங்களாம்பிகை. தீர்த்தம்: பெண்ணையாறு.



கல்வெட்டு:


( A.R.E. 1902 - No. 309 - 319; A.R.E. 1921 -420 - 483, S.I.I.Vol. VII No. 938 - 948; S.I.I.Vol.XII The Pallavas.)

திருவெண்ணெய் நல்லூர்த் தடுத்தாட் கொண்ட தேவரது திருக்கோயிலில், சோழமன்னர்களில் முதலாம் இராசராச உடையார், கோப்பரகேசரி பன்மரான உடையார் இராசேந்திரதேவன், இரண்டாங் குலோத்துங்கஉடையார், இரண்டாம் இராசாதிராசஉடையார், மூன்றாங் குலோத்துங்கஉடையார், மூன்றாம் இராசராசன் உடையார், மூன்றாம் இராசேந்திரஉடையார் இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியதேவன், விக்கிரம பாண்டிய உடையான் இவர்கள் காலங்களிலும்; பல்லவமன்னர்களில் முதலாம் கோப்பெருஞ் சிங்கன், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் இவர்கள் காலங்களிலும், விசயநகர வேந்தர்களில் மகாமண்டலேஸ்வரன் வீரபூபதி உடையார், விஜயமகாராயர், விரூபாட்சுமகாராயஉடையார், குமாரமல்லி கார்ச்சுனராயஉடையார், கிருஷ்ணதேவராய உடையார் இவர்கள் காலங்களிலும், சாளுவமன்னர்களில் மகாமண்டலேஸ்வரன் நரசிங்கதேவமகாராயர் காலங்களிலும், காலத்திலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இறைவர்: இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவர், முதலாம் இராசராச உடையார் கல்வெட்டில், திருவெண்ணெய்நல்லூர்த் திருவருட்டுறை ஆள்வார் என்றும், இரண்டாம் இராசாதிராச உடையார் முதலானோர் கல்வெட்டுக்களில் திருவெண்ணெய் நல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர் என்றும், தடுத்தாட்கொண்ட தேவர் என்றும் அழைக்கப் பெறுகின்றனர்.

குறிக்கப்படும் திருமேனிகளுள் சில: திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவரின் 32 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் பள்ளியறை நாச்சியார், வாணலிங்க தேவர் இவர்களும், திரிபுவனச் சக்கரவர்த்தி உடையார் இராஜராஜ தேவரின் கல்வெட்டில் க்ஷேத்திரபாலப் பிள்ளையாரும், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கஉடையார் கல்வெட்டில் திருக்காமக்கோட்டம் மேலைமூலையில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரும் குறிக்கப்படுகின்றனர். இப்பிள்ளையாரின் முழுப்பெயரும் கிடைக்கப்பெறவில்லை. எழுத்துகள் சிதைந்து விட்டபடியால் `தில்லைவ ....... நன் பிள்ளையார்` என்பது மாத்திரம் கிடைக்கின்றது.

எழுந்தருளுவிக்கப்பெற்ற திருமேனி: `பூமருவிய திசைமுகத் தோன் படைத்த பெரும்புவி விளங்க` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய மூன்றாங் குலோத்துங்கசோழ உடையார் காலத்தில், கூடல் ஏழிசை மோகன் மணவாளப்பெருமாள் வாள்நிலை கண்டானான காடவராயன் ஒரு திருமேனியை இக்கோயிலில் எழுந்தருளி வித்துள்ளான். கல்வெட்டில் அப்பெயர் சிதைந்து விட்டது.

சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பற்றிய செய்திகள்: இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆளுடைய நம்பி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர். அவர் நாச்சி மாரோடு எழுந்தருளியிருக்கும் இடம் ஆட்கொண்ட தேவர் தீர்த்தக் குளமான தேவனார் கேணியின் கீழ்க்கரை ஆகும். இச்செய்திகள் `பூமன்னுபதுமம்பூத்த ஏழுலகும் தாம் முன் செய் தவத்தால் பருதிவழித்தோன்றி` என்று தொடங்கப்பெறும் மெய்க்கீர்த்தியையுடைய உடையார் இரண்டாங் குலோத்துங்க சோழதேவரின் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1148 மே மாதம் ஒன்பதாம் தேதி ஆகும். ஒரு தெருவுக்கு ஆலால சுந்தரப்பெருந்தெரு என்றும், ஒரு சுரபி மன்றாடிக்கு நம்பி ஆரூரன் கோன் என்றும், ஒரு ஊர்க்கு, தடுத்தாட்கொண்நல்லூர் என்றும் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவ்வூரில் வழக்குவென்ற திருவம் பலம் என்னும் பெயரால் கருங்கல் கட்டிடம் ஒன்று இருந்ததை, திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழதேவரின் 29 ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கின்றது. இந்த அம்பலம் உள்ள இடம் வேறு ஒருவர்க்கு உரியதாய் இருந்தது. அதற்குப்பதில் கோயிலுக்குரிய ஒரு இடத்தை அவர்க்குக் கொடுத்து இந்த இடம் கொள்ளப்பட்டது என்பதையும் அக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.

திருச்சின்னத்துக்குப் `பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம்` என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இறைவர், சுந்தர மூர்த்தி சுவாமியை நோக்கி `நமக்கும் அன்பின்பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற் றமிழ் பாடுக` என்றார். அதற்குச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், `கோதிலா அமுதே! இன்று உன் குணப்பெருங்கடலை நாயேன் யாதினை அறிந்து என் சொல்லிப்பாடுகேன்` என்றார். அதற்கு இறைவர் `முன்பு என்னைப் பித்தனென்றே மொழிந்தனை, ஆதலால் என் பெயர் பித்த னென்றே பாடுவாய்` என்றார். அப்பொழுது சுந்தரமூத்தி சுவாமிகள் `பித்தாபிறைசூடீ` எனப் பெரிதாந் திருப்பதிகம் பாடினார் எனச் சேக்கிழார் பெருந்தகையார் கூறிய வரலாற்றை உறுதிப் படுத்துகின்றது `பிச்சன் என்று பாடச்சொன்னான் திருச்சின்னம்` என்ற கல்வெட்டுத் தொடர். (பித்தன் - பிச்சன், தகரத்துக்குச் சகரம் போலி)

அக்கல்வெட்டு பின்வருமாறு: `ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவநச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு உஎ (27) ஆவது மேஷ நாயற்று பூர்வபக்ஷத்து சதுர்த்தஸியும் புதன்கிழமையும் பெற்ற அத்தத்து நாள் திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்ட தேவர்க்கு மத்யஸ்தன் செஞ்சி உடையான் உதையன் கைலாய முடையான் இட்ட பிச்சன் என்று பாடச் சொன்னான் திருச்சின்னம் இரண்டினால் வெள்ளி எடை ஐம்பத்து ஐங்கழஞ்சும், ஆவுடைய நாயனார் சீபாதத்து சாத்தின கொடியுடன் கோத்தகால் காறையுடன் ஒன்பது மாற்றில் பொன் இரு கழஞ்சு. இது பன்மாஹேஸ்வர ரகை்ஷ` (S.I.I. Vol XII The Pallavas No. 231.)

குறிப்பு: இக் கல்வெட்டு இரண்டாம் கோப்பெருஞ்சிங்க உடையார் காலத்தில் பொறிக்கப்பட்டது. இக் கல்வெட்டு ஏற்பட்ட காலம் கி.பி. 1268 மார்ச்சு 28 ஆம் தேதியாகும். 

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விடப்பட்ட நில நிவந்தம்.
நாச்சிமாரோடு பூசை கொண்டருளுகிற ஆளுடைய நம்பிக்கு அமுதுபடி உள்ளிட்ட நிவந்தங்களுக்கு உடலாக (மூலதனமாக) திரு வெண்ணெய்நல்லூர்ச் சபையார், திருவெண்ணெய்நல்லூர் நாட்டுப் பட்டர்கள், ஆதனூர் எல்லையில் அதிராதீர காடகையாஜியார், ஆட் கொண்ட தேவற்குச் சட்டிவிளாகமாகக்கொண்டு விட்ட நிலத்துக்கு வடக்கே, அரைவேலி நிலத்தைக்கொடுத்துள்ளனர். இது நிகழ்ந்தது இரண்டாம் குலோத்துங்கசோழ தேவரின் காலமாகும் (கி.பி.1148). இதே ஆண்டில் களத்தூர் சிறிய நம்பி சகஸ்ரன். ஆளுடையநம்பிக்கு அடைக்காய் அமுது` இலையமுது இவைகளுக்கு, திருவெண்ணெய் நல்லூரில் ஸ்ரீவானவன் மாதேவிவதிக்கு மேற்கு, மும்முடிச்சோழ வாய்க்காலுக்கு வடக்கு இதற்குட்பட்ட தோட்டநிலத்தைக் கொடுத்துள்ளான். ஆட்கொண்டதேவர் கோயிலிலே மாடாபத்தியஞ்செய்த உடையார் அகமுடையாள் பொன்னாண்டாள், ஆளுடைய நம்பிக்கு அமுது படிக்கும், திருக்கைகொட்டிப்புறத்துக்கும் ஆக, திருவெண்ணெய் நல்லூரில் வானவன்வதிக்கு மேற்கு, மும்முடிச்சோழ வாய்க்காலுக்கு வடக்கு நிலம் ஒன்றே அரைமா அரைக்காணிக் கீழரையைவிற்று, விற்ற காசை ஸ்ரீ பண்டாரத்திலே ஒடுக்கினாள். (மாடாபத்தியம் கோயில் விசாரணை. திருக்கைகொட்டிப்புறம் - திருமுறை ஒதுதற்குரிய கோயில் மண்டபத்துக்கு விட்டநிவந்தம். புறம் - நிவந்தம்.)

திருவருட்டுறை உடைய மகாதேவர்க்கு அளிக்கப்பட்ட நிவந்தம்: அருட்டுறை உடைய மகாதேவர் கோயில்  அகமுடையார்மகன் திருமலை அழகியானான வீரகள், வீரப் பல்லவரைய உடையான் அருட்டுறை உடைய மகாதேவர்க்கு, தூபமணி, தூபம், துடர், திருவாராத்தித்தட்டம் இவைகளைக் கொடுத்துள்ளான். இவனுக்கு ஏமப்பேறூரில் பெண்ணையாற்றுக்குத் தெற்கே புன்செய் நிலம் 3500 குழியும் இவன் தம்பிக்குத் திருவெண்ணெய்நல்லூரில் 1250 குழியும் ஆக 4750 குழிகள் அல்லது முப்பதுமா வரை நிலங்கள் இருந்தன. இத்திருமலை அழகியான் இறக்கும் பொழுது தன்னுடைய இந்தநிலத்தை உடையார் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் முதலிகளில் இராசராச தேனம்மையனுக்குத் திருக்கை வழக்கமாக வழங்கினான். அந்நிலத்தை இந்த முதலி, கோயில் மண்டபத்தில் பதினாலும், திருக்காமக்கோட்டத்தில் மூன்றும், திருநடைமாளிகையில் மேல் எல்லையில் அழகிய நாயனார் இருக்கும் இடத்தில் ஒன்றுமாக நாடோறும் பதினெட்டு, சந்தி விளக்குகள் எரிப்பதற்குக் கொடுத்துள்ளான்.

பொதுச் செய்திகள்: இவ்வூரில் இராஜராஜப்பேரேரி ஒன்று உள்ளதை, கோப்பரகேசரி இராசேந்திரசோழதேவரின் ஆறாம் ஆண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனவே இந்த ஏரி மிகப் பழமையானதாகும்.

ஆட்கொண்டதேவர் கோயிலுக்குத் தென்பாலுள்ள குளம் கி.பி.1396 இல் விரூபாக்ஷுவின் அமைச்சர் நஞ்சண்ணாவின் தமையனார் விருப்பண்ணாவால் பழுதுபார்க்கப்பட்டது, 

விசயநகர வேந்தராகிய கிருஷ்ணதேவரா உடையார் தம்பேரால் தடுத்தாட்கொண்ட தம்பிரானார் திருக்கோயிலிலும், வைகுந்தப்பெருமாள் திருக்கோயிலிலும், கிருஷ்ணதேவராய உடையார் சந்தி நடத்துவதற்குச் சர்வமான்ய மாக நன்செய் நிலம் 35 மாவும், புன்செய் நிலம் 20 மாவும் கொடுத்துள்ளார்.

இக்கோயிலிலுள்ள கோபுரத்து வாசலின் முகப்பு குலோத்துங்க சோழதேவரின் மூன்றாம் ஆண்டில், கூடல் மோகன் ஆளப்பிறந்தான் நாராயணனாகிய காடவராயனால் கட்டப் பட்டதாகும். இக்கோபுரத்தில் திருவெண்ணெய்நல்லூர் இறைவரின் புகழைப்பற்றி ஐந்து தமிழ்ப் பாடல்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோபுரத்தின் உள்சுவரில் சகம் 1108 அதாவது கி.பி. 1186 இல் சில பாடல்கள் அரசுநாராயணன் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயர் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளன. அவை காடவராயர் குடும்பத்தைப் பற்றிய செய்திகளாகும். இக் கோயிலில் ஆட்கொண்ட தேவர் பாலாடியருள பசுக்கள் விடப்பட்டிருந்தன. பசுக்களை விட்டவர் ரிஷபம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். அப்பசுக்கள் சுரபி மன்றாடிகளிடம் விடப்பட்டிருந்தன. அவர்கள் அப்பாலை அருமொழிதேவன் நாழியால் தவறாது அளந்து வந்தனர், 
[சுரபி மன்றாடிகள் - பசுக்களைப் பாதுகாக்கும் இடையர்.]

இரண்டாம் கோப்பெருஞ்சிங்க உடையார், ஆனைக்கு அரசு வழங்கும் பெருமாள்தோப்பு என்னும் தோப்பைத் திருக்கோயிலுக்கு விட்டிருந்தான். அது 12 மா நிலப்பரப்புள்ளது. மேலும் இவன் சீழகம் பட்டில் கோப்பெருஞ்சிங்கன் தோப்பு என்னும் பெயருள்ள தோப்பு ஒன்றையும் விட்டிருந்தான். சோழமண்டலத்தில் விக்கிரம சோழவள நாட்டில் திருப்பழனம், வடகுரங்காடுதுறை முதலான ஊர்கள் விறைக் கூற்றத்தைச் சேர்ந்தன. விறைக்கூற்றம் என்பது விறை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டது.

அந்த விறை என்னும் ஊர்க்கு அகளங்கபுரம் என்னும் வேறு பெயர் உண்டென்பதை இக் கோயில் கல்வெட்டு உணர்த்துகின்றது. அவ்வூரில் உள்ள ஒருவன் தடுத்தாட்கொண்ட தேவர்க்கு விளக்குக்கும் விழாவிற்கும் 120 காசு கொடுத்துள்ளான்.

பட்டுடையான்: `இந்நாளில் இப்படி செலுத்துவேனாய் இப் பொன்கொண்டேன், இத் தளிப்பட்டுடையான் ஈஸ்வரக்காணி வாம தேவன் திருவெண்காடனேன்`(S.I.I. Vol. III. Part III No. 94. p. 227. ) என்னும் கல்வெட்டுப்பகுதியில் பட்டுடையான் என்ற தொடர் வந்துள்ளது, இந்த ஆட்கொண்ட தேவர் கோயிலில் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் கல்வெட்டில்கண்ட ``ஆட்கொண்டதேவர்  சைவா சாரியஞ் செய்து வருகிற பட்டுடையார்களைத் தவிர``, என்னும் (S.I. Vol. VII No.944.)கல்வெட்டுப்பகுதியால் பட்டுடையார் என்பது சைவா சாரியம் மட்டும் செய்வாரைக் குறிக்கும் என்பது தெற்றெனப் பெறப்படுகின்றது. எனவே பட்டுடையார் என்பது கோயிற்பூசை செய்வாரைக் குறிக்காது.

``இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ளடு`` முதலாம் இராசராசன் காலத்தில் இவ்வூர், திருவெண்ணெய்நல்லூர் என்றும், கோப்பரகேசரிபன்மரான உடையார் இராஜேந்திரதேவர் கல்வெட்டில் இராஜேந்திரசோழ வளநாட்டுத் திருமுனைப்பாடித் திருவெண்ணெய் நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்றும், இரண்டாம் இராசாதிராச உடையார் காலம்முதல் பின்னுள்ளோர்காலம்வரை இராசராச வளநாட்டுத் திருமுனைப்பாடி திருவெண்ணெய்நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்றும் இக்கோயில் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளது.

Tuesday 4 February 2014

சிணுங்கல்களின் அர்த்தம்
அறியாதவனாயிருந்தேன்
என்னவளின் சிணுங்கலை கேட்காத
வரை......!!!

Sunday 2 February 2014

படைத்தவன் சொன்னாலும்
புலிகள் மரத்தில் வாழாது....!
ஆண்டவனே சொன்னாலும்
அகமுடையார் குலம்
அடங்கி போகாது...!

Wednesday 15 January 2014

தொலைந்து போன
என்னை தேடுவதை மறந்து..
தொலைவாகிப்போன
உன்னை தேடுகிறேன்...
நான்
தொலைந்து போனது உனக்குள்
என்பதால்

Monday 11 February 2013


‘நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்று நேதாஜி சொன்னார்...அந்த வார்த்தைக்கு காரணமே பசும்பொன் தேவர் அய்யா தான்

நேதாஜி :

1938 இல் திரிபுரியில் காங்கிரஸ். இரண்டாவது தடவையாக நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டி இடுகிறார். நேதாஜியை நாடு விரும்புகிறது. காந்தி அடிகள் விரும்பவில்லை, படேல் விரும்பவில்லை. இன்னும் பலபேர் சேர்ந்து சூழ்ச்சி செய்தார்கள். அவர்கள் சதி செய்தார்கள். பண்டித நேரு அப்பக்கமா? இப்பக்கமா? என்று கடைசிவரை தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தார். நேதாஜியின் பக்கம்தான் அவரது உள்ளம் இருந்தது.

ஆனால், காந்தியாரின் எண்ணத்துக்கு விரோதமாகச் செல்கின்ற துணிச்சல் பலருக்கு இல்லை. மகாத்மா காந்தியின் வேட்பாளராக பட்டாபி சீதாராமையா போட்டி இடுகிறார். வாக்குப்பதிவு நடக்கிறது. அப்போது என்ன சொன்னார்கள்? காந்தி அடிகளின் தரப்பில் சொல்லப்பட்டது, தென்னாட்டில் இருப்பவர்கள், இன்றைய ஆந்திரம் உள்ளிட்ட திராவிட பூமியாக அன்றைக்குத் திகழ்ந்த சென்னை இராஜதானியில் இருப்பவர்கள், பட்டாபி சீதாராமையாவை விரும்புகிறார்கள் என்றபோது, அதேபகுதி பட்டாபி சீதாராமையாவுக்குப் பின்னால் இல்லை, அது நேதாஜிக்குப் பின்னாலேதான் இருக்கிறது என்பதை நிரூபிக்க, இங்கே இருந்து சென்ற தலைவர்கள் பசும்பொன் தேவர் திருமகனாரும், காமராசரும் ஒருசேர நேதாஜிக்கு ஓட்டுப் போட்டார்கள். இதெல்லாம் ஆவணம்!

ஆனால், உட்கட்சி ஜனநாயகம் அன்றைக்கே சிதைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது. 105 டிகிரி காய்ச்சலில் நேதாஜி துடித்துக் கொண்டு இருந்தபோதும், ‘காரியக்கமிட்டி கூட்டத்தின் முடிவை நாங்கள் நிறைவேற்றுவோம், காந்தி சொல்வதுதான் காரியக் கமிட்டி. காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு அதிகாரம் இல்லை’ என்று ஜனநாயகத்தைச் சிதைத்தனர். அந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் விவரிப்பதற்கு நேரம் இல்லை.

நேதாஜி காய்ச்சலோடு மேடையில் வந்து இருந்தார். தானாக ராஜினாமா செய்தார். அதற்குப்பிறகுதான் ‘பார்வர்டு பிளாக்’ என்ற பெயரை, பத்திரிகைக்குச் சூட்டினார். கட்சிக்கும் சூட்டினார். ஆக, காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் சிதைக்கப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார். மேற்கு வங்கத்தில் கல்கத்தாவில் இருக்கிற வெள்ளைக்காரன் நீல் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். எப்படி நீங்கள் அந்தப் பேராராட்டத்துக்கு அறிவிப்பு கொடுக்கலாம்? என்று கட்சியில் இருந்து நடவடிக்கை எடுத்தார்கள். நேதாஜி எந்தத் தவறும் செய்யவில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் ‘பார்வர்டு பிளாக்’ கட்சி உதயமாயிற்று. வங்கத்துச் சிங்கத்தின் வரலாறு, தியாக வரலாறு. ஈடு இணையற்ற வரலாறு.

நான் இன்றைக்கு மதுரையில் சொல்கிறேன். தோழர்களே, வங்கத்துச் சிங்கம் நேதாஜியின் போராட்டத்துக்கு உரிய இடத்தை இந்த நாட்டுச் சரித்திரத்தில் தருவதற்கு பலர் மறுத்தாலும்கூட, அவருக்கு நிகராக எவரும் இந்த நாட்டில் போராடவில்லை.

அவருடைய படையில், 40,000 தமிழர்கள் இருந்தார்கள். வங்காளிகள் அல்ல – பஞ்சாபிகள் அல்ல – மராத்தியர்கள் அல்ல – குஜராத்திகள் அல்ல – ஒரியாக்காரர்கள் அல்ல – எவரும் இல்லை. நேதாஜியின் படையில் 40,000 தமிழர்கள் இருந்தார்கள்.

அதனால்தான், ‘நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்’ என்று நேதாஜி சொன்னார்.

அவருக்காகத் தமிழர்கள் உயிர்களைக் கொடுத்தார்கள். துப்பாக்கித் தோட்டாக்களை மார்பில் ஏந்தினார்கள். அந்தப் பட்டாளத்தின் அணிவகுப்புக்கு அடித்தளமாக இருந்தவர், பசும்பொன் தேவர் திருமகனார் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

சென்னையில் நேதாஜி :

அப்படிப்பட்ட பசும்பொன் தேவர் திருமகனார், 1939 ஆம் ஆண்டு சென்னைக்கு நேதாஜியை அழைத்துக் கொண்டு வருகிறார். பரபரப்பான சூழல். காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். பார்வர்டு பிளாக் கட்சி தோன்றிவிட்டது. சென்னையில் செப்டம்பர் 3 ஆம் தேதி பேசுகிறார்.

இந்து பத்திரிகை சிறப்பு பதிப்பு போட்டு கடற்கரைக் கூட்டத்தில் விநியோகம் செய்கிறது. உலகத்தைத் திடுக்கிடச் செய்கின்ற செய்தி வந்துவிட்டது. ஆம், ஹிட்லர் தன்னுடைய போரைத் தொடங்கிவிட்டார். ஆக்கிரமிப்பைத் தொடங்கிவிட்டார். செகோஸ்லோவியாவுக்கு உள்ளே நாஜிப்படைகள் நுழைந்துவிட்டன. இந்தச் செய்தியை சிறப்புப் பதிப்பில் பிரசுரித்த பத்திரிகை வெளிவருகிறது. துண்டுச் சீட்டும் மேடையில் போகிறது நேதாஜிக்கு. அவர் இந்திய அரசியலைப் பேசிக்கொண்டு இருக்கிறார்.துண்டுச்சீட்டு வந்தவுடன், உலக அரசியல் பக்கம் திருப்பினார் நேதாஜி.

நான் எல்லோர் உரைகளையும் படித்து இருக்கிறேன். பண்டித ஜவஹர்லால் நேரு எழுதிய உலக சரித்திரக் கடிதங்களைப் போன்ற ஒரு நூல், இதுவரை இந்தியாவில் இன்னொருவர் எழுதவில்லை. அற்புதமான நூல். உரைகள் என்று பார்த்தால், பல்கலைக் கழகங்களில், நகராட்சி மன்றங்களில், கல்லூரி வளாகங்களில், மாநாட்டு மேடைகளில் நேதாஜியின் பேச்சு எந்தப் பொருளை எடுத்தாலும் சரி, மெய்சிலிர்க்க வைக்கும். நாடி நரம்புகளில் ஓடுகின்ற குருதியைச் சூடேற்றும். சிந்திக்க வைக்கும் அற்புதமான பேச்சாளர்.

அப்படிப்பட்ட பேச்சாளர், பன்னாட்டு அரசியல் பற்றிப் பேசுகிறார். அங்கு இருந்தே சுற்றுப் பயணத்தை இரத்து செய்துவிட்டுப் போகலாமா? என்று நினைக்கிறார். தேவர் திருமகன் சொல்கிறார், மதுரையைச் சுற்றிய சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்து இருக்கிறேன். நீங்கள் கட்டாயம் வர வேண்டும்‘ என்கிறார். நீண்டநேரம் ஆலோசனை செய்து, மதுரையில் மட்டும் பேசுவது என்று முடிவு எடுக்கிறார்கள். இதே மதுரை மாநகரில் 6 ஆம் தேதி நேதாஜியும், தேவர் திருமனாரும் பேசினார்கள். கடைசியாக நேதாஜி பேசியது மதுரையில்தான்!

இதுதான் வேளை :

இங்கே பேசிவிட்டு நேதாஜி, தேவர் திருமகனை அழைத்துக் கொண்டு நாகபுரிக்குப் போகிறார். அங்கே காங்கிரஸ் கட்சியின் கூட்டம். அந்த உறுப்பினர்களை மட்டும் அல்ல, ஜெயப்பிரகாக்ஷ் நாராயணன் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி நடத்தினார் அல்லவா, அவர் போன்ற தலைவர்களையும், பல தலைவர்களை அழைத்து ஒரு கூட்டம், மாராட்டிய மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்தக்கூட்டத்துக்கு பசும்பொன் தேவர் திருமகனாரையும் அழைத்துக் கொண்டு போகிறார் நேதாஜி. அக்கூட்டத்தில் காந்திஜி உட்கார்ந்து இருக்கிறார், பண்டித ஜவஹர்லால் நேரு இருக்கிறார். நேரு நேதாஜியின் மீது மிகுந்த அன்பாக இருந்தவர்.

கூட்டம் நடக்கிறது. நேரு சொல்கிறார்:‘உலகத்தில் பல நாடுகள் பிரிட்டனை ஆதரிக்கின்றன. எனவே, ஹிட்லரை எதிர்த்து நாமும் இங்கிலாந்தை ஆதரிப்போம்’ என்கிறார். உடனே நேதாஜி கேட்கிறார், ‘பல நாடுகள் என்று சொல்கிறீர்களே, எந்த நாடுகள்? ஆஸ்திரேலியாவா? கனடாவா? இல்லை காலனி நாடுகளாக இருக்கக்கூடிய இலங்கை, பர்மா போன்ற நாடுகளா? எந்த நாடுகள்?’ என்று கேட்கிறார். பதில் சொல்லவில்லை நேரு.

அதற்குப்பிறகு இங்கிலாந்து நாட்டு ஆதரவு நிலை எடுக்கிறபோது, காந்தியாரைப் பார்த்து நேதாஜி சொல்கிறார், ‘கீதையைப் படிக்கிறீர்கள் அர்ஜூனனுக்குக் கண்ணன் சாரத்தியம் செய்தார், கெளரவர்களை அழிப்பதற்காக. அதைப்போல நாட்டை விடுவிக்கின்ற போரில் நீங்கள் கண்ணனாக இருந்து வழி நடத்துங்கள். இது பொருத்தமான வேளை. நம்மை அடிமைகளாக வைத்து இருக்கின்ற பிரிட்டிக்ஷ்காரனை விரட்டுவதற்குச் சரியான நேரம்’ என்று சொல்கிறார்.

வாக்குவாதம் வருகிறது. அதனால், கையில் வைத்து இருக்கின்ற பேனாவை எடுத்து மேஜையில் குத்துகிறார் பண்டித நேரு. அதுமட்டும் அல்ல, ‘ You you you ’ என்று நேதாஜியைப் பார்த்து நேரு சொல்கிறார். அவருக்கு முன்கோபம் அதிகம் வரும்.

நேதாஜி கோபப்படவில்லை. காந்தியாரைப் பார்த்துச் சொல்கிறார். காலமெல்லாம் நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களே, யாரை முன்னிறுத்தி நீங்கள் அகிம்சையைப் போதித்தீர்களோ அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்று பாருங்கள். அழைத்ததால் வந்தேன். எப்படிப்பட்ட மரியாதை கொடுக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி வெளியேறினார். அந்தக் கூட்டத்தில் பார்வையாளராக பசும்பொன் தேவர் கலந்து கொண்டார்.

அதன்பிறகு நேதாஜி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் உண்ணாநோன்பு இருந்து உயிரை முடித்துக் கொள்ளத் தீர்மானித்தார். வேறு வழி இல்லாமல் விடுதலை செய்தார்கள். அவர் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டார்கள். கொல்கத்தாவில் அவருடைய வீட்டு மாடியிலேயே தங்கி இருக்கிறார். அடியேன் அந்த வீட்டுக்குச் செல்கிற வாய்ப்பு கிடைத்தது. நேதாஜியின் அண்ணன் மகன் சிசிர் குமார் போஸ் அவர்கள், ஜனவரி 23 ஆம் தேதி நேதாஜி பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசுவதற்கு என்னை அழைத்துச் சென்றார்.

அவர் தங்கி இருந்த அறை, படுத்து இருந்த படுக்கை எல்லாம் அப்படியே இருக்கிறது. அந்த இடத்தில் இருந்து ஒரு நள்ளிரவு நேரத்தில் சிசிர்குமார் போஸ் காரை ஓட்ட, அங்கிருந்து புறப்பட்டு, ஆப்கானிஸ்தான் காபூல் வழியாக, ரக்ஷ்யா சென்று, மாஸ்கோ வழியாக பெர்லின் போய்ச் சேர்ந்தார் நேதாஜி. இது சரித்திரம்.

அப்படிப்பட்ட நேதாஜி அவர்களோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் ஆவார்கள். 1962 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, இத்தென்னாட்டு மக்கள் தைப்பொங்கல் கொண்டாடிக் கொண்டு இருந்தபோது, இந்த மதுரை மாநகரில் தமுக்கம் மைதானத்தில் பசும்பொன் தேவர் திருமகனார் பேசிய கடைசி கூட்டம். அந்தக் கூட்டத்தில் ராஜாஜியும் கலந்து கொண்டார்.

டி.வி.எஸ். விருந்தினர் விடுதியில் இருவரும் சந்திக்கிறார்கள். அங்கிருந்து கூட்ட மேடைக்கு சேர்ந்தே வருகிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஐந்து இலட்சம் பேர் கலந்துகொண்டதாக அன்றைய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. வரலாறு காணாத கூட்டம். ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு மக்கள் பசும்பொன் தேவர் திருமகனாரைப் பார்க்கிறார்கள். ராஜாஜி அமர்ந்து இருக்கிறார். கூட்டத்தில் இருப்பவர்கள் தேவர் திருமகனைப் பார்த்து கைகளைக் காட்டிக்காட்டி, ‘அய்யோ அய்யோ’ என்று வேதனைப்படுகிறார்கள். பலர் அழுகிறார்கள். ‘இப்படி மெலிந்து விட்டாரே, அய்யோ இப்படி ஆகிவிட்டதே’ என்று கூட்டத்தில் இருப்பவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இரண்டரை மணிநேரம் பேசினாலும்கூட, சிம்மம் போல் நின்று பேசுகின்றவர் தேவர் திருமகன். பேசும்போது, துண்டுக்குறிப்புகளையும் பார்க்க மாட்டார். சோடா அருந்த மாட்டார். தண்ணீர் அருந்த மாட்டார். எத்தனை மணிநேரம் பேசினாலும், இடையில் ஒரு வினாடி கூட வேறுபக்கம் கவனத்தைத் திருப்ப மாட்டார். ‘அர்ஜூனன் கணையும், அம்பின் நுனியும், பறவையின் கழுத்தும் ஒரே நேர்கோட்டில் இருந்தது’ என்று மகாபாரதம் சொல்கிறதே, அதைப்போல எது இலக்கோ, அந்த இலக்கையே குறியாக வைத்துப் பேசுவார்.

ஆனால், அன்றைக்குத்தான் முதன் முதலாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே பேசினார். அவருடைய தோற்றத்தில் ஏற்பட்ட நலிவைப் பார்த்து மக்கள் அழுதார்கள்.

கடுகு அளவும் இல்லை :

அதற்கு முன்னர் நான் ஒன்றைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், சரித்திரத்தில் சில செய்திகள், இல்லாத ஒன்றைக் கறை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற கவலையின் காரணமாக நான் சொல்கிறேன்.

நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. தென்னாட்டில் முதுகுளத்தூர் வட்டாரத்தில் நடக்கக் கூடாத கலவரம் நடந்து விட்டது. இரத்தம் கரைபுரண்டு ஆறாக ஓடியது. உயிர்கள் பலியாகின. குய்யோ முறையோ என்று இருதரப்பிலும் அழுகையும் கண்ணீருமாக இருந்தது. நான் சொல்கிறேன் சகோதரர்களே, தேவர் திருமகனார் உள்ளத்தில் எந்தப் பகை உணர்வும், யாருக்கும் தீங்கு செய்யவேண்டிய எண்ணமும் கடுகு அளவும் கிடையாது என்பதை நான் இந்த மாசிவீதியில் சொல்ல விரும்புகிறேன்.

அப்பொழுது சொன்னார்: ‘ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்களை – என் அரிஜன சகோதரர்களை யாராவது தாக்கி, அவர்களுக்குத் தீங்கு செய்வீர்களானால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவீர்களானால், என் இருதயத்தைப் பிளந்து இரத்தத்தைக் கொட்டச் செய்கிறீர்கள்’ என்று அறிக்கை விட்டார்.

அவரைப் பொறுத்தமட்டில் அவருடைய ஆயிரம் ஏக்கர் நிலபுலன்களை அள்ளித்தருகிறபோது, அனைத்து சமூக மக்களுக்கும் தலித் சமூகத்துச் சகோதரர்களுக்கும் சேர்த்தே அனைவரும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளட்டும் என்ற நோக்கம்தான் அவருக்கு இருந்தது.